Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...50

இன்று என் விருப்பம்.....எனக்கு மிகவும் பிடித்த பாடல்...சுசீலாம்மா,கவியரசர்,மெல்லிசைமன்னர்கள்.....இவர்களின் எல்லாப் பாடலுமே பிடித்தவைதானே....இது என்ன???புருவம் உயர்த்தும் ரசிகர்களுக்கு ஒரு சுய விளக்கம்...8 வயதில் எனக்குப் பரிச்சயமான பாடல் இன்று வரைத் தவறாமல் ஒரு நாள் விடாமல் நான் கேட்ட பின்பு விழி மூடும் பாடல்....24X7....மெலடி மெட்டு....இறவாப் பாடல்...இரவுப் பாடல்...."பாலிருக்கும்..பழமிருக்கும் பசி இருக்காது"...கேட்க வசதியில்லாத இடத்தில் நானே எனக்குள் பாடிக் கொள்ளும் ஒரு அருமையான பாடல்...

பாவமன்னிப்புத் திரைப் படத்தில் என் அபிமான நடிகர் திலகம்,தேவிகா அவர்களுக்காக சுசீலாம்மவுடன்,மெல்லிசை மன்னர் ஹம்மிங்கில் பயணித்திருக்கும் பாடல்.

தன் காதலை நாயகனிடம் எந்தத் தயக்கமுமில்லாமல் சொல்ல வரும் நாயகி...அதை அமைதியாக ம்ஹூம்...ஓஹோ வோடு நிறுத்திக் கொள்ளும் நாயகன்...

பெண் தன் காதலை ஒரு ஆர்வத்தோடு சொல்லும் போது ஆண் அடி வயிற்றிலிருந்து குரல் எழுப்பி இரவு நேரத்தில் பாடினால் எப்படியிருக்கும்?சுவை இருக்காது?மேலும் அது மாற்றி மாற்றி இருவர் பாடும் டூயட் பாடல் ஆகிவிடும்....உதடுகள் அசையாமல் மென்மையாக அவளின் காதலுக்கு மேன்மை சேர்க்க வேண்டும்....அப்படி இங்கே மேன்மை சேர்த்திருப்பவர் மெல்லிசை மன்னரே(சிலர் அது ஜி.கே.வெங்கடேஷ் என்று சொல்வதுண்டு)சுசீலாம்மா மெல்லிசை மன்னர் இணைந்து பாடும் பாடலில் இதற்குத் தனி இடம்...

காட்சியில் நடிகர் திலகம் தேவிகா வாழ்ந்திருப்பார்கள்...அதுவும் தேவிகாவின் கண்ணழகும்,நளினமும்....நடிகர் திலகம் பற்றிச் சொல்லவே வேண்டாம்....அப்படி ஒரு அழகு...திரையில் ஆக்கிரமித்துக் கொள்ளும் இவரின் குண்டு குண்டுக் கன்னங்களும்...தேவிகாவின் அழகிய கண்களும்...

'பாலிருக்கும்...பழமிருக்கும்...பசி இருக்காது...

பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது"இது பல்லவி....பாடலின் ஆரம்பமே வயலின்களின் சாம்ராஜ்யம்தான்...நடு நடுவில் மென்மையான மாண்டலின்....பாலிருக்கும்...ஹுஹூம்...பழமிருக்கும்...ஹுஹூம்..பசி இருக்காது...இங்கே ஒரு ஓஹோ...பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது...ம்ம்ஹூஹூம்...நாலுவகை குணமிருக்கும்...ம்ஹுஹும்...ஆசைவிடாது...விடாது...இங்கு சுசிலாம்மாவின் டாது....ஒரு அழுத்தமான ஒட்டிக்கொண்ட ஆசை...

நடக்க வரும் கால்களுக்குத் துணிவிருக்காது....கள்ளி....சொல்ல வந்திருக்காள் காதலி...துணிவில்லையாம்....அதை நாசூக்காகத் தன் குரலில் சொல்லுவார் சுசீலாம்மா...

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்..பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்...."கட்டவிழ்ந்த கண்கள்.....என்ன அருமையான சொற்றொடர்....தூக்கம் வராமல் கண்ணைக் கட்டுகிறது..விழித்துப் பார்க்கிறாள்...அவனைத் தேடுக்கிறாள்..காணாமல் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு கனவைத் தொடர்கிறாள்....இதைச் சொல்லு முன் கட்டவிழந்த கண்ணிரண்டும்..கட்டிவைத்திருக்கும் கண்களைத் திறந்து விட்டால் எப்படி ஒளியை சந்திக்குமோ அப்படி விழிகள் அவனைத் தேடுகிறதாம்.....ஆஹா...

பட்டுநிலா வான் வெளியில் காவியம் பாடும் கொண்டப் பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும்.....பள்ளியறை வரை சென்ற நீள் கனவு...அதை ரசித்து ஆமோதிக்கும் ம்ஹூஹுஹும் ஹூம்....

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே.....

இந்த நினைவில் ஒரு நொடி கண்மூடி அவன் மௌனமாக ரசிக்க...ஒரு இடைவெளி....மெல்லிய விரல்களால் தேவிகா அவனைத் தட்டி எழுப்ப...அங்கு ஒரு டேக்கா....அதிஅற்புதம்...

பேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே..

அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே.....

காதலின் வேகம்....எப்படிப்பட்டது....ஜாதி மதம் பார்ப்பதில்லை...கண்பார்த்து நெஞ்சு உணர்ந்து நேசம் மலர்கிறது....இது உண்மையான காதல்...இனக்கவர்ச்சி,இளமைக் கனவு 'நீயா நானா காதல் அல்ல"அதனால் அது நிரந்தரமானது...அலையும் மேகக் குவியல்கள் வரையும் அழியும் கோலங்களில்லை....நிலையான இந்தக் காதல் மறைவதில்லை.....இத்துடன் பாடல் முடிவதில்லை...

நிசப்தமான இரவைக் கலைக்கும் சுசீலாம்மவின் மெல்லிய குரலில் பாலிருக்கும்....அதுவரை வெறும் ஹம்மிங்காய் இருந்த மெல்லிசை மன்னரின் குரலில் பேஸில் பாலிருக்கும்...பழமிருக்கும்....

பஞ்சணையில் இங்கு ஒலிக்கும் மெல்லிசை மன்னரின் பன்ச்....

தூக்கம் வராது.......வராது....கண்டிப்பாக வராது....இப்படி ஒரு பாடல இப்படி அர்ப்பணித்து இப்படிப் பாடினால் எப்படி தூக்கம் வரும்?

சுசீலாம்மாவின் அந்த தூக்கம் வராது சங்கதிக்காக இன்று வரையிலும் தூக்கம் வராமல் கேட்டுக்க் கொண்டே இருக்கும் நான்....உங்களோடு மீண்டும்...மீண்டும்.....