Visali Sriram

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...46.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கவிஞர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் இந்நாளில்.....தமிழோடு உறவாடி,விளையாடித் தமிழ் தென்றலால் வருடிய கவியரசரின் நினைவு நாள் இன்று....அவருடைய எல்லாப் பாடல்களுமே என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானவை என்றாலும்....கவியரசர்,மெல்லிசை மன்னர்கள் சுசில்லாம்மா கூட்டணி என்றால் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்தது போலாம்...

எத்தனையோ பாடல்கள்.....இன்றைய பகிர்வு ஒரு தமிழ்ப் பொங்கு புதுப் புனல்....

அடிக்கு அடி வார்த்தைக்கு வார்த்தை...எளிய,பேச்சு வழக்கு சொல்லாடல்கள்தாம் என்றாலும் உள்ளே கூற வந்த கருத்தை ஒரு நயம்பட உரைத்திருக்கும் பாணி அவருக்கே உரியது...

இசைப் பரிமாணத்தைப் பற்றி நரமனிதர்கள் சொல்ல முடியாது.

வார்த்தைக்கு வடிவு சேர்த்திருக்கும் சுசீலாம்மாவின் தேனருவி...

கதையின் நாயகி தன் செல்லப் பிள்ளையிடம் தன் கதையைச் சொல்வது போல காட்சி அமைப்பு...அவள் கணவன் இப்போது சிறையில்....குழந்தையைக் கூடப் பார்க்க முடியாமல்....

இதற்கு கவியரசரின் சந்தனச் சந்தம்......

"காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை..

கண்மணியே வரவு வைத்தாள் உன்னையடா உன்னை..

எழுதி வைத்தான்,பிரிந்து விட்டான் என்னையடா என்னை..

ஏற்றுக் கொண்டாள் ஈன்றெடுத்தாள் பொன்னையடா பொன்னை...."

அன்னை,உன்னை,என்னை,பொன்னை.....மெல்லினத்தில் முடியும் சொற்களுக்கு மென்மையோடு இனிமையும் வாரி வழங்கி இருப்பார்கள் அம்மா!!

காதலில் வரவு செலவு சொல்கிறார் கவியரசர்....

நகரத்தார் சமூகத்தில் பற்று ,வரவு அடிக்கடி இடம் பெரும் சொற்கள் தாம்...வியாபாரத்துக்கு ஆடும் சொற்கழஞ்சுகளை....சிந்துக்கு சந்தமாக்கி இருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்வது?காதலில் கடன் வைத்த அன்னை...அந்தக் கணக்கை எழுதிவிட்டுப் பிரிந்து சென்ற கணவன்..மதலையை வரவு வைத்துக் கொண்டு...பொன்னான மகனாக ஈன்றெடுத்தாள் அவள்....4 வரிக்குள் ஒரு காதல் கதை.....

குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு பாடும் பாடலில் கதையை வேறு எப்படிச் சொல்வது?....பிறக்கிறது சரணம்...

தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே..

அவள் அன்பின் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே..

என்னரு மகனே நீ வரும் வேளை தந்தை அருகில்லையே..உன்

இருவிழி அழகை நால் விழியாகக் காணவும் வழியில்லையே....இங்கு நிற்கிறார் கவியரசர்....

நானும் அவரும் சேர்ந்து உன்னைக் கொஞ்ச வழியில்லாமல் போயிற்றே...இது கருத்து...இதைக் கவிதையாக வடித்திருக்கும் அழகைப் பாருங்கள்...இரு விழி அழகை(குழந்தையின் அழகை)நால் விழியாக(கணவனும் மனைவியுமாக இருவருமாக..இதை 2+2..4 விழியாக)சின்ன விஷயம் தான்...ஆனாலும் இன்று வரைப் பாடல் நிலைத்து நிற்க(மனதில்)இந்த வரிகளும்....வாசுதேவன்....அங்கு சுசீலாம்மாவின்,ஒரு அருமையான சங்கதியும்தான்...

இறுதி சரணம்...

இரவினில் ஆடு ஒளிகளுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு...இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பொஞ்சிறகு...

திருமுகம் ஒன்றே மனையறம் வாழச் செய்யும் திருவிளக்கு

இன்று தெய்வமும் நீயும் துணையில்லாவிடில் யாருமில்லை எனக்கு"

நான் உயிரோடிருப்பதே உனக்காகத்தானடா என் கண்ணே என்று பாசத்தையேல்லாம் பிள்ளையிடம் கொட்டித் தீர்க்கிறாள்...

யாருமில்லை எனக்கு..இதை சுசீலாம்மா பாடும் போது கலங்காதவர்கள் இருப்பது அரிது...அப்படி ஒரு நெஞ்சு கனக்கும் சோகத்தை ஒரு இனிமை கலந்து பாட அம்மாவுக்கு சொல்லித் தரணுமா....இன்று வரை இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் இந்த மூவர் கூட்டணியை நினைந்து நினைந்து வியக்கிறேன்...எத்தனை வித உணர்ச்சிப் போராட்டங்கள்...இசையோடு,தமிழோடு இனிமையோடு கலந்து பருகி இருக்கிறோம்????வியந்து கொண்டே....உன்னையடா உன்னை...வரிகளைத் தொடர்ந்தே செல்கிறோம்.......கவியரசே! உம்மை இந்தக் குயிலோசையுடன் நினைத்துக் கொண்டே இசை மழையில் நனைந்து கொண்டே நாளும்......நாங்கள்..