Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...49.

இன்றைய பகிர்வு ஒரு தாயின்,கேட்பவர் நெஞ்சை நனைத்து முறுக்கிப் பிழியும் குமுறல்...1967 இல் வெளிவந்த இருமலர்கள் படத்திலிருந்து ...."அன்னமிட்ட கைகளுக்கு அன்புசெய்த கண்களுக்கு உன்னை விட்டுப் போவதற்கு..உள்ளம் இல்லை மகளே"...

வாலியின் வலியான வரிகளுக்கு இசை கூட்டி இருப்பவர் மெல்லிசை மன்னர்.கே.ஆர்.விஜயாவுக்காகப் பாடி இருப்பது சுசீலாம்மா...

அம்மாவுக்கு தாய்மைப் பாடல்கள் பாடுவது மிகவும் எளிதான ஒரு விஷயம்...உண்மையான உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்து விடுவார்...இங்கும் அப்படியே...

கதைப் படித் தன் கணவனுடைய புது வாழ்வுக்கு வழி விட்டுத் தான் ஒதுங்க முடிவு எடுக்கும் நாயகி...ஆனால் அவள் ஒரு தாய்...குழந்தையை விட்டுப் போக எந்தத் தாய்க்கும் வலிக்கத் தானே செய்யும்....வாலியின் வரிகள் அதை சுமந்து வர....வார்த்தைக்குள் பத்துமாதச் சுமையைப் புகுத்தி இதயத்தைத் தொடும்படி பாடி இருப்பார் சுசீலாம்மா...ஆரம்பமே,அவள் முடிவு,ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகு எடுத்தது என்பதை உணர்த்தும் முகமாக அன்னமிட்ட கைகளுக்கு என்று ஆரம்பிக்கும் அந்த கமறும் குரல்....அன்பு செய்த கண்களுக்கு அதில் இறங்கும் இரக்கம்...உன்னை விட்டுப் போவதற்கு உள்ளமில்லை மகளே....சிதறும் சோகம்...அதை அடித்து சொல்லுவதாக மறுபடியும் ஒலிக்கும் உள்ளம் இல்லை மகளே...

உன்னைவிட்டு போவதற்கு...இங்கு ஒரு சுருக் சங்கதி....மகளே....இந்த ளேவில் ஒரு உருக்கும் உருட்டு ப்ருகா...

"தாய் வழி நீ நடக்கத் தந்தை வழி பேரெடுக்க நானதைப் பார்ப்பதற்கு நேரமில்லை மகளே"....எப்படியெல்லாமோ உன்னை வளர்த்து ஆளாக்க நினைத்திருந்தேன்...ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை மகளே....இதை அழுத்தி சொல்வதாக இரண்டாம் முறை நேரமில்லை மகளே...

இத்தனை நாளாய் ஒரு தவமாக,என் கணவர் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்...அன்பு வளர வாழ்ந்திருந்த எனக்கு இப்போது ஒரு நெருக்கடி...இடத்தை ஒழித்துக் கொடுத்துவிட்டுப் புறப்படுகிறேன்...என் ஸ்தானத்தில் இருந்து உன்னைக் கவனித்துக் கொள்ள இன்னொரு தாய் வருவாள்...உன்னைப் பார்த்துக் கொள்வாள்..."தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக"....இங்கு கமறும் குரல்.....டக் டக்கென்று உணர்ச்சிகளை மாற்றுவதற்கு இசையில் பொடி வைத்திருக்கும் மெல்லிசைமன்னர்...அதை ஊதித் தள்ளிவிட்டுப் போகும் அம்மா....என்ன ஒரு சவாலான சங்கீதம்!!!

தூங்கும் மகளுக்கு ஒரு அறிவுரை..."தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்...என் தலைமகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்..நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்...அதைக் கண்குளிரக் காண்பதற்கு நான் வரவேண்டும்"...வரிகளில் நமக்கு ஒரு நிம்மதி தந்திருப்பார் வாலி...அவள் கோழையில்லை...உயிரையெல்லாம் மாய்த்துக் கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லை...ஒரு முடிவோடு தான் கிளம்புகிறாள்...மகள் வளர்ந்து பெரியவளாகித் திருமண பந்தத்தில் இணைய,நல்லவர்கள் சூழ்ந்திருந்து அவளை வாழ்த்தும் அந்த மங்களமான தருணத்தில் கலந்து கொள்ளக் கண்டிப்பாக நான் வருவேன் என்று உறுதி கூறிச் செல்வதாகப் பாடல் முடியும்."கண்குளிரக் காண்பதற்கு நான் வரவேண்டும்"இதை ஒரு வேள்வியாகக் கோரிக்கையாக வைத்துப் பாடுவதாக இரண்டாம் முறை நான் வரவேண்டும்....

இதை எத்த்னை முறைக் கேட்டிருப்பேன் என்று எண்ணிக்கை வைத்துக் கொள்ளவில்லை...ஆனால் ஒவ்வொரு முறையும் அழுதிருக்கிறேன்...ஒரு சோகமான சுகம் என்று கூடச் சொல்லலாம்...ஒரே வரியில் சொல்லணும்னா...சுசீலாம்மாவோடு சிரித்து,குதித்து,ஆடி ஓடி அழுதிருக்கிறேன்.....இப்போதும் அப்படியே.....தொடர்ந்து செல்கிறேன் உங்களோடு....http://www.youtube.com/watch?v=FfGqjXfIYlQ